×

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 2 பசுமாடுகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளது பற்றி வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாலம் கிராம பகுதியில் ஒன்றை காட்டு யானை சுற்றி வருகிறது.

இதனை அறியாமல் அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி வசந்தம்மா கூலி வேலைக்காக தோட்டம் ஒன்றின் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு காட்டு யானை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் காட்டுயானை அவரை தாக்கியது. இதில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி அஸ்வத்தம்மா என்பவரையும் அதே காட்டு யானை தாக்கியுள்ளது.

இதில் அஸ்வத்தம்மாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னியாலம், தாவரக்கரை, தாசரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Thenkanikkottai ,Jawalgiri ,Krishnagiri district ,Krishnagiri ,Thenkanikotte ,Jawalagiri ,Forest Department ,Dinakaran ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்